செய்திகள்
குடியரசு தினவிழாவில் பங்கேற்க பிரேசில் அதிபர் டெல்லி வருகை
குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபர் போல்சனரோவை தூதரக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவருக்கு இரு நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். மேலும், இருநாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.