செய்திகள்
கோப்பு படம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பதிலாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டை கொண்டுவாருங்கள் - திக் விஜயசிங்

Published On 2020-01-23 15:17 GMT   |   Update On 2020-01-23 15:17 GMT
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பதிலாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டை கொண்டுவரவேண்டுமென காங்கிரஸ் கட்சியின் திக் விஜயசிங் தெரிவித்துள்ளார்.
போபால்:

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. 

இதன் இறுதி வரைவுப்பட்டியல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் பலரது பெயர்கள் இல்லாததால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்த்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான திக் விஜயசிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பதிலாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டை கொண்டுவரவேண்டுமென உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் பிரதமர் மோடியிடமும் நாட்டில் உள்ள இளைஞர்கள் கேட்கவேண்டும். 

நாம் ஏற்கனவே குடிமக்கள் பதிவேட்டை கொண்டுள்ளோம். ஆதார் கார்டு மூலம் நீங்கள் (மத்திய அரசு) எங்கள் தகவல்களை பயோமெட்ரிக் முறை மூலம் எடுத்துக்கொண்டீர்கள். 



நீங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளீர்கள். ஆகையால், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தேவை என்ன? 

நான் நாட்டில் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு சிறு ஆலோசனை ஒன்றை வழங்க்குகிறேன். அது என்னவென்றால், நீங்கள் உங்கள் மதங்களை பின்பற்றிக்கொள்ளுங்கள். உங்களை யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால், பாஜக-வின் தவறான வழிகாட்டுதல்களுக்கு சென்றுவிடவேண்டாம்.

அவர்கள் (பாஜக) உங்களுக்கு வேலைவாய்ப்பை அளிபதில்லை. ஆனால், வேலைவாய்ப்பே இல்லாத பாதைக்கு உங்களை அழைத்து செல்கின்றனர். 

வேலைவாய்ப்பு இல்லாத மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ் அமைப்பு மத ஊர்வலங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. வகுப்புவாத உணர்வுகளை தூண்டி பாஜக வாக்குகளை பெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News