செய்திகள்
தீ விபத்து நிகழ்ந்த 14 மாடி வணிக வளாகம்

குஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2020-01-21 20:30 GMT   |   Update On 2020-01-21 20:30 GMT
குஜராத்தில் 14 மாடி கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சூரத்:

குஜராத் மாநிலம் சூரத்தின் கடோதரா பகுதியில் ரகுவீர் சீலியம் என்ற 14 மாடி கொண்ட ஜவுளி வணிக வளாகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் முதல் தளத்தில் உள்ள கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவி 2-வது தளத்துக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News