செய்திகள்
சிவசேனா

அரசியல் ஆதாயத்துக்காக இவர்கள் பெயரை பயன்படுத்தியது இல்லை: சிவசேனா

Published On 2020-01-18 02:05 GMT   |   Update On 2020-01-18 02:05 GMT
அரசியல் ஆதாயத்திற்காக சத்ரபதி சிவாஜி, இந்திரா காந்தியின் பெயரை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை என சிவசேனா தெரிவித்து உள்ளது.
மும்பை :

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அடுத்தடுத்து இரண்டு சர்ச்சைகளில் சிக்கினார். புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மும்பையில் நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில் சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதையடுத்து அவர் தனது கருத்தை திரும்ப பெற்றார்.

இதேபோல பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதிய ‘இன்றைய சிவாஜி மோடி’ புத்தக விவகாரத்தில், மன்னா் சத்ரபதி சிவாஜியின் வழிதோன்றல் என்பதை நிரூபிக்க ஆதாரத்தை காட்ட முடியுமா? என பாரதீய ஜனதாவின் உதயன் ராஜே போஸ்லேவுக்கு சவால் விட்டார்.

சஞ்சய் ராவத் எம்.பி.யின் இந்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக ஒருபோதும் சிவசேனா பயன்படுத்தியது இல்லை. இந்திரா காந்தியை சிவசேனா எப்போதும் மதிக்கிறது. அவர் சிறந்த ஆளுமை மிக்கவர். அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடந்த போதெல்லாம் சிவசேனா ஒரு கேடயமாக செயல்பட்டது.

அவர் பாகிஸ்தானை பிரித்து பிரிவினைக்கு பழிவாங்கிய ஒரு சக்திவாய்ந்த தலைவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவரது சந்திப்புகள் சர்ச்சைக்குரியதாக இருக்க முடியாது. பிரதமராக இருப்பவர் பிரிவினைவாதிகளுடன் கூட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுபோன்ற விவாதங்கள் சமீபத்திய காலங்களில் நடந்து உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. எனவே அந்த கட்சி பல பிரச்சினைகளை தோண்டி எடுப்பதில் மும்முரமாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News