செய்திகள்
பஞ்சாப் சட்டசபை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2020-01-17 10:29 GMT   |   Update On 2020-01-17 10:29 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சண்டிகர்:

மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இதன்மூலம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றது.

இந்நிலையில், மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் இன்று சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை  திருத்தச்சட்டம், நாடு முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களுடன் நாடு தழுவிய வேதனையையும் சமூக அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த  சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாட்டை தவிர்க்கவும், இந்தியாவில் உள்ள அனைத்து மத குழுக்களுக்கும் சட்டத்தின்முன் சமத்துவத்தை உறுதி செய்யவும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை  ரத்துசெய்யுமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த சபை தீர்மானிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News