செய்திகள்
ஜேஎன்யூ வன்முறை- வாட்ஸ்அப், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பதில் கேட்டு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள், வாட்ஸ்அப் செய்திகள், அதன் தொடர்புடைய பதிவுகள் மற்றும் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாக்கக் கோரி, ஜே.என்.யூ. பேராசிரியர்கள் அமீத் பரமேஸ்வரன், அதுல் சூட் மற்றும் சுக்லா விநாயக் சாவந்த் ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பல்கலைக்கழக வன்முறை விவகாரத்தில் டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டெல்லி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்முறையின்போது பதிவான சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து ஒப்படைக்கும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறியிருப்பதாகவும், ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் வாட்ஸ்அப், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பதில் கேட்டு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், டெல்லி காவல்துறை மற்றும் மாநில அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.