செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஹேமந்த் சோரன் இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த மாதம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்தித்தார்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சோரன் கூறுகையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்றபின் பிரதமர் மோடியை முதன்முதலாக சந்தித்தேன். மாநில பிரச்சனைகள் குறித்து விவாதித்தேன். பழங்குடியினர் நலன் காக்கப்படும் என பிரதமர் மோடியும் உறுதியளித்தார் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த வாரம் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.