செய்திகள்
பிரதமர் மோடி

உ.பி. சாலை விபத்தில் 20 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2020-01-11 03:49 GMT   |   Update On 2020-01-11 03:49 GMT
உத்தர பிரதேசத்தில் சொகுசு பேருந்து லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் பலர் பலியாகி உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி சென்ற ஆம்னி சொகுசு பேருந்து லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.  தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெகுநேரமாகியும் 20 பேரை மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகிறது. 



இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். ‘விபத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Tags:    

Similar News