செய்திகள்
உச்ச நீதிமன்றம்

மறைமுகத் தேர்தல்- வீடியோ பதிவை தாக்கல் செய்ய இடைக்கால தடை

Published On 2020-01-10 07:18 GMT   |   Update On 2020-01-10 12:01 GMT
தமிழகத்தில் மறைமுகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்து தாக்கல் செய்யும்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்காக நாளை நடைபெற உள்ள மறைமுகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்கு மட்டுமே நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், வீடியோ பதிவை தாக்கல் செய்யும்படி உத்தரவிடுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவை தாக்கல் செய்வது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

Similar News