செய்திகள்
பிரதமர் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்தால் சிறை நிச்சயம்?
பிரதமர் நரேந்திர மோடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலியில் பகிர்வோரை போலீசார் கைது செய்வார்கள் என்ற குறுந்தகவல் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுந்தகவலில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்களை பகிரும் வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் காவல் துறையின் நடவடிக்கையை எதிர்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற குறுந்தகவல்களை அனுப்புவோரை வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து நீக்கவோ அல்லது குரூப்களை அழிக்கவோ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வைரல் குறுந்தகவல் பற்றி ஆய்வு செய்ததில், போலீசார் வாட்ஸ்அப் தகவல்களை இயக்க முடியாது என தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் செயலி முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், இதில் பரப்பப்படும் குறுந்தகவல்களை இயக்குவது சாத்தியமற்றதாகும். இதேபோன்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.
அந்த வகையில் வைரல் குறுந்தகவல்களில் உள்ள தகவல்கள் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இதைபோன்ற தகவல்கள் அடங்கிய பதிவுகள் சில மாதங்களுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.