செய்திகள்
டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்

டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க ஸ்மார்ட்போன் போதும்: டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2020-01-09 02:26 GMT   |   Update On 2020-01-09 02:26 GMT
டெல்லி சட்டசபை தேர்தலில், வாக்காளர் சீட்டை கொண்டு செல்லாதவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஓட்டு போடலாம் என்று டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங், கூறியுள்ளார்.
புதுடெல்லி :

டெல்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி 8-ந் தேதி நடக்கிறது. மொத்த தொகுதிகள் 70 ஆகும்.

வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை (பூத் ஸ்லிப்) எடுத்துச் செல்ல மறந்து விட்டவர்களுக்கு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். அவர்களுக்காக ‘க்யூஆர்’ கோட் வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 11 மாவட்டங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி வீதம் 11 தொகுதிகளில் இந்த வசதி அறிமுகம் ஆகிறது.

இதன்படி, அத்தகைய வாக்காளர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், வாக்காளர் உதவி மைய செயலியில் (ஆப்) இருந்து ‘க்யூஆர்’ கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை ‘ஸ்கேன்’ செய்துவிட்டு, ஓட்டு போட அனுமதி வழங்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரம் உள்ள பகுதிக்கு சற்று தள்ளி ஸ்மார்ட்போனை வைத்து விட்டு ஓட்டு போட வேண்டும்.



இந்த தகவல்களை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுப்போட தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 80 லட்சத்து 55 ஆயிரத்து 686 பேர். பெண் வாக்காளர்கள் 66 லட்சத்து 35 ஆயிரத்து 635 பேர். மூன்றாம் பாலினத்தவர் 815 பேர் ஆவர். கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், 9 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக 72 வாக்குச்சாவடிகளும், பதற்றமானவையாக 3 ஆயிரத்து 209 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 80 வயதை தாண்டிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட உள்ளது. இந்த தகவல்களையும் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார்.
Tags:    

Similar News