செய்திகள்
சோனியா காந்தி

குருத்வாரா மீது தாக்குதல் - பாகிஸ்தானில் சீக்கியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சோனியா வலியுறுத்தல்

Published On 2020-01-04 16:03 GMT   |   Update On 2020-01-04 16:03 GMT
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சீக்கிய தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நன்கானா சாகிப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தான் அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிந்து தண்டனை கிடைக்க பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

Similar News