செய்திகள்
டெல்லி: தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு படைவீரர் உயிரிழப்பு - ரூ.1 கோடி நிதி அளித்தார் கெஜ்ரிவால்
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் மேற்கில் பீர கார்கி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு தீயணைப்பு வீரர்கள் 35 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் பலர் இடிபாடுக்குள் சிக்கினார்கள். 13 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலாளி ஆகிய 14 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீயணைப்பு படைவீரரான அமித் குமார் பல்யான் (29), சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தனது உயிரை இழந்த தீயணைப்பு படைவீரர் குடும்பத்துக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.