செய்திகள்
ரெயில் கட்டணம் உயர்வு மத்திய அரசின் புத்தாண்டு பரிசு - சித்தராமையா
பயணிகள் ரெயில்களுக்கான கட்டண உயர்வு என்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் புத்தாண்டு பரிசு என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
பயணிகளுக்கான ரெயில் கட்டணங்களை இந்தியன் ரெயில்வே நேற்று திடீரென உயர்த்தியது.
இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டது. குளிர்சாதன வசதி ரெயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டது.
இரண்டாம் வகுப்பு சாதாரண ரெயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள பயணிகள் ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பயணிகளுக்கான ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளுக்கான ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் புத்தாண்டு பரிசு என கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.