செய்திகள்
அணுசக்தி நிலையங்களின் பட்டியல் - பாகிஸ்தான், இந்தியா பரஸ்பரம் பகிர்வு
1988-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன.
புதுடெல்லி:
இந்தியா - பாகிஸ்தான் இடையே தத்தமது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1988-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களின் பகிர்வு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நடைபெறுவது வழக்கம்.
போர் ஏற்பட்டால் கூட அணுசக்தி நிலையங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடாது என்ற அடிப்படையிலும், விபத்து தவிர்ப்பு அடிப்படையிலும் அணுசக்தி நிலையங்களின் பட்டியல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்திய அதிகாரிகள் இந்தப் பட்டியலை இன்று காலை 11 மணிக்கு ஒப்படைத்தனர்.
இதேபோல், இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய விவரங்களை ஒப்படைத்தனர்.