செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2020-01-01 08:20 GMT   |   Update On 2020-01-01 09:35 GMT
இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர்  2 ஆம் தேதி தொடங்கியது.  

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர். 



இந்த நிலையில்,  நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்யும் தேதியில் மாற்றம் இல்லை. ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை திருத்தம் செய்யலாம். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லே மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு முகமையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
Tags:    

Similar News