செய்திகள்
மகாராஷ்டிராவில் நியமனம் செய்யப்பட்ட காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மந்திரிகள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்தி வருகின்றன.
முதல் மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தனது மந்திரி சபையை நேற்று விரிவுபடுத்தினார். இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மந்திரி பதவிகளை ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் மந்திரிகள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் உள்ளிட்ட மந்திரிகள் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உள்பட பலர் உடனிருந்தனர்.