செய்திகள்
முதியோர்

முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் - மத்திய அரசு

Published On 2019-12-27 04:25 GMT   |   Update On 2019-12-27 04:25 GMT
முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மூத்த குடிமக்களுக்கான ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம், ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்குகிறது. எல்.ஐ.சி. மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதாருக்கு இன்னும் பதிவு செய்யாதவர்கள், இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்ய வேண்டும்.

தெளிவற்ற ‘பயோ மெட்ரிக்’ விவரங்களால், ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய முடியாவிட்டால், அத்தகைய நபர்களுக்கு ஆதார் எண் கிடைக்க மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் பிரிவு உதவும்.

ஒருமுறை பெறப்படும் ரகசிய குறியீட்டு எண் (ஓ.டி.பி.) பெற சாத்தியம் இல்லாவிட்டால், ஆதார் கடிதம் மூலம் பலன்கள் அளிக்கப்படும். ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள கியூ.ஆர். கோட் மூலம் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News