செய்திகள்
பிரியங்கா காந்தி கலந்து கொண்ட போராட்டத்தில் இப்படியொரு பதாகையா?
பிரியங்கா காந்தி கலந்து கொண்ட போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுக்க தீவிரமடைந்துள்ளது. புதிய சட்டத்திருத்தம் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பிரியங்கா காந்தியின் பின் நிற்கும் நபரின் கையில் உள்ள பதாகையில் இந்தியாவை இஸ்லாம் நாடாக மாற்றுக என்பதை தெரிவிக்கும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட உண்மை புகைப்படத்தில் உள்ள பதாகையில் வேலைவாய்ப்பை கோரும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் அதிகளவு பகிரப்படுகிறது.
இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களில் பிரியங்கா காந்தி இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற பிரச்சாரம் செய்து வருகிறார் என்ற வாக்கில் தலைப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த புகைப்படம் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
உண்மையில் இந்த புகைப்படம் டிசம்பர் 16-ம் தேதி பிரியங்கா காந்தி தலைமையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.