செய்திகள்
வைரல் புகைப்படம்: இந்திய ராணுவம் தான் காரணமா?
இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த கிராமம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக கூறி, சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள கிராமம் ஒன்றை இந்திய ராணுவம் அதிரடியாக கைப்பற்றி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது. இதற்கென இந்திய ராணுவம் மேற்கொண்டு அதிரடி வான்வழி தாக்குதலில் எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
புகைப்படத்தில் முழுக்க முழுக்க புகையால் சூழப்பட்ட நகரம் காட்சியளிக்கிறது.
வைரல் புகைப்படத்துடன், "இது உறுதி செய்யப்பட்ட செய்தி, இந்திய படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கரேன் கிராமத்தினை கைப்பற்றியுள்ளது. இதில் பாகிஸ்தான் கமாண்டோக்கள், ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் கமாண்டோக்கள் உயிரிழந்துள்ளனர். நீலம் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம்" என கூறப்பட்டுள்ளது.
வைரல் பதிவினை ஆய்வு செய்ததில் இந்த புகைப்படம் சிரியாவில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவினை பல ஆயிரம் பேர் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இந்த புகைப்படம் கொண்ட செய்தி ஒன்றை ஆகஸ்ட் 7, 2017 இல் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. செய்தியின் படி சிரிய ராணுவம் அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸ் பகுதியை மீட்க வான்வழி ராணுவ தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வைரல் புகைப்படம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.