செய்திகள்
790 டன் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்தது : ஆந்திராவுக்கு அனுப்பி வைப்பு
வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்யும் 49 ஆயிரத்து 500 டன் வெங்காயத்தின் ஒரு பகுதியான 790 டன் வெங்காயம் முதல் தவணையாக மும்பை வந்து சேர்ந்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து 49 ஆயிரத்து 500 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணையாக வெளிநாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 790 டன் வெங்காயம் இன்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது.
அடக்கவிலையான சுமார் 60 ரூபாய்க்கு இறக்குமதி வெங்காயம் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மும்பை வந்த வெங்காயம் முதலில் புதுடெல்லி மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் வெளிநாடுகளில் இருந்து மேலும் 12 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியா வரவுள்ளதாக மத்திய நுகர்வோர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.