செய்திகள்
இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கும் 'நகர நக்சல்கள்’ - பிரதமர் மோடி ஆவேசம்
'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைப்பதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான ஐந்தாம்கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திவீர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள சாஹேப்கன்ஜ் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
'பாஜக-வுக்கு நீங்கள் வழங்கியுள்ள ஆசீர்வாதம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளுக்கு உறக்கமற்ற இரவுகளை ஏற்படுத்துள்ளது.
புதிய குடியுரிமை சட்டம் குறித்த பொய்யான தகவல்களை பரப்பி நாட்டில் உள்ள முஸ்லிம்களிடையே பதற்றமான சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது. ஆனால், இந்த சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என நான் உறுதியளிக்கின்றேன்.
'நகர நக்சல்கள்’ இளைஞர்களை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். மேலும், மாணவர்கள் பிரச்சனைகளை ஜனநாயக முறையில் முன்வைத்து விவாதிக்க வேண்டும்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மூலம் முஸ்லிம்கள் அல்லது வேறெந்த இந்திய குடிமகனின் உரிமையை எப்படி அபகரித்துவிட முடியும்? என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்'
இவ்வாறு அவர் பேசினார்.