செய்திகள்
ஜார்க்கண்ட் வாக்காளர்கள்

ஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 62.54 சதவீத வாக்குப்பதிவு

Published On 2019-12-16 13:52 GMT   |   Update On 2019-12-16 14:52 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த 4ம் கட்ட தேர்தலில், 62.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 4ம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தியோகர், பொகாரோ, தன்பாத், கிரிடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  

இந்த தேர்தலில் மொத்தம் 47,85,009 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 15 தொகுதிகளிலும் மொத்தம் 6101 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி ராஜ் பாலிவார் (மதிபூர்), நிலம் மற்றும் வருவாய்த்துறை மந்திரி அமர்குமார் பவுரி (சாணக்கியாரி) உள்ளிட்ட 221 பேர் களத்தில் உள்ளனர். 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 15 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும்,  சராசரியாக 62.54 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். 

இதையடுத்து ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்டமாக 16 தொகுதிகளுக்கு டிசம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Tags:    

Similar News