செய்திகள்
பட்டேல் சிலை பின்னணியில் பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

Published On 2019-12-15 09:02 GMT   |   Update On 2019-12-15 09:02 GMT
இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேலின் 69-ம் ஆண்டு நினைவுநாளான இன்று நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி சூட்டியுள்ளார்.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் சராசரி விவசாயக் குடும்பத்தில் 31-10-1875 அன்று பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல். சிறுவனாக இருந்தபோது அவரது உடலில் ஒரு கட்டி வந்தது. அவரது பெற்றோர் வல்லபாயை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றனர். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றார் வல்லபாய் பட்டேல்.

பள்ளிக்காலத்தில் படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்து, சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். வழக்கறிஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டனுக்கு அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

அகமதாபாத்தில் வக்கீல் தொழில் செய்தபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, சமூக தொண்டின்மூலம் பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட பின்னர், வக்கீல் தொழிலை உதறிவிட்டு சுதேசி இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் நிலவிய வேளையில் ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அந்தப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு பணியாததால் மகாத்மா காந்தி மற்றும் பட்டேல் தலைமையில் வரிகொடா இயக்கப் போராட்டம் வெடித்தது. இதற்குஅரசு பணிந்தது. வரி ரத்தானது. அரசியல் அரங்கில் பட்டேல் சந்தித்த முதல் வெற்றியாக இது அமைந்தது.

பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பட்டேலுக்கு வெற்றி கிடைத்தது. அன்றுமுதல் ‘படைத்தலைவர்’ என்னும் பொருள்படும் வகையில் மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன்பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.

வட்டமேஜை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு காந்தி, பட்டேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் இடையில் நெருக்கம் வளர்ந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ‘சிப்பாய்’ என்று அழைக்கப்பட்ட பட்டேல், இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான இவர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பின்னர் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.



நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது அகன்ற இந்தியாவை உருவாக்கியதில் முன்னாள் உள்துறை மந்திரி பட்டேல் ஆற்றிய அரும்பணி போற்றுதலுக்குரியதாகும்.

வலிமையான - அகன்ற இந்தியா என்ற இலக்குக்காக அனைத்து வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் எதற்கும் அஞ்சாத ’இரும்பு மனிதராக’ நின்று சமாளித்தார்.

15-12-1950 அன்று தனது 75-ம் வயதில் மும்பையில் காலமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 1991-ம் ஆண்டு நாட்டின் மிகவும் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும், சர்தார் வல்லபாய் பட்டேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ‘ஒருமைப்பாடு சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது. 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையாகவும் கருதப்படுகிறது.

அந்த பெருமகனாரின் 69-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலை வாழ்த்தி செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி, ‘மிக உயரிய தலைவரான சர்தார் பட்டேலின் நினைவுநாளன்று அவருக்கு தலை வணங்குகிறேன். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளால் நாம் ஆத்மார்த்தமாக உத்வேகம் அடைந்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News