செய்திகள்
திருப்பதி கோவில்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 1600 போலீசார் பாதுகாப்பு

Published On 2019-12-14 04:47 GMT   |   Update On 2019-12-14 04:47 GMT
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருமலை:

திருப்பதியில் ஜனவரி 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 7-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று கோவிலில் அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து கொடுப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது.

கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களுக்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க திருமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்படும்.

பாதுகாப்பு பணியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

கோவிலில் 5-ந்தேதி நள்ளிரவில் அனைத்து பூஜைகளும் முடிந்ததும், 6-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் நடைதிறக்கப்பட்டு மார்கழி மாத பூஜைகள் நடக்கிறது.

அதை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக எடுத்து செல்லப்பட்டு, அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறார்கள். அனைவரும் ஏழுமலையானை வழிபட ஏற்பாடு செய்யப்படும்.

ரிங்ரோட்டில் இருந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வரை தரிசன வரிசைகள் அமைக்கப்படும். தரிசன வரிசையை யொட்டி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும்.

பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர்கள், தேசிய மணவர் படையினர் ஆகியோர் ஈடுபடுத்தபடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News