செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை -புதிய மசோதா நிறைவேற்றம்

Published On 2019-12-13 18:50 GMT   |   Update On 2019-12-13 18:50 GMT
பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் புதிய மசோதா ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.
ஐதராபாத்:

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு  அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டசபையில் இன்று நிறைவேறியது.  இந்த சட்டம், பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது.

முன்னதாக பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த சூழ்நிலையில் ஆந்திர மாநில திஷா சட்டம் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, மற்றும் ஆந்திர திஷா சட்டம் - குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்கள் ஆந்திர சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
Tags:    

Similar News