செய்திகள்
சபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
- இந்த ஆண்டு சபரிமலை வந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள போலீசார் மறுத்து விட்டனர்.
- கேரள போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
புதுடெல்லி:
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
ஐயப்பன் கோவிலின் ஐதீகம் என்று கருதப்பட்ட இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த கோர்ட்டு கடந்த ஆண்டு அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கலும் செய்தனர்.
கடந்த மாதம் சீராய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. அதே நேரம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், மாற்றம் இல்லை என்றும் கூறியது.
கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கேரள போலீசார் இந்த ஆண்டு சபரிமலை வந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டனர்.
புனேவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்திதேசாய் வந்தபோதும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி போலீசார் திருப்பி அனுப்பினர்.
திருப்திதேசாயுடன் வந்த கேரள பெண் பிந்து அம்மணி கொச்சி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க வந்தபோது பக்தர்கள் அவரை வழி மறித்து மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை குறித்து பிந்து அம்மணி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால் கேரளா போலீசார் சபரிமலை செல்ல எங்களை அனுமதிக்காததோடு பாதுகாப்பு வழங்கவும் மறுக்கிறார்கள்.
எனவே கேரள போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
இதுபோல மாடல் அழகியும், பெண் சமூக ஆர்வலருமான ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார்.
இந்த மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ரஹானா பாத்திமா, பிந்து அம்மணி ஆகியோரின் வக்கீல்கள் வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி இது தொடர்பான உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக அறிவித்தார். அதன்படி, பெண்கள் இருவரின் மனுக்களும் இன்று தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சபரிமலையில் இப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையை சீர்குலைக்க விரும்பவில்லை. சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடரும்.
அதேசமயம் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு தர இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது. இந்த வழக்கு இப்போது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அமர்வு வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்கும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
சபரிமலை கோவிலுக்குள் போலீசார் நிறுத்தப்படுவதை கோர்ட்டு விரும்பவில்லை.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.