செய்திகள்
ரிச்சர்டு பிரான்சன்

நான் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவன் - இங்கிலாந்து முன்னணி கோடீசுவரர் சொல்கிறார்

Published On 2019-12-12 11:10 GMT   |   Update On 2019-12-12 11:10 GMT
எனது கொள்ளு பாட்டி கடலூரில் பிறந்தவர் எனவும் தான் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவன் எனவும் இங்கிலாந்து முன்னணி கோடீசுவரர் கூறியுள்ளார்.
மும்பை:

இங்கிலாந்து நாட்டில் முன்னணி கோடீசுவரராக திகழ்ந்து வருபவர் ரிச்சர்டு பிரான்சன்.

இவர், விர்ஜின் குரூப் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

விமான போக்குவரத்து நிறுவனம், விண்வெளி சுற்றுலா நிறுவனம் என சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை அவர் நடத்துகிறார்.

அவருடைய சொத்து மதிப்பு ரூ. 40ஆயிரம் கோடி ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

தற்போது ரிச்சர்டு பிரான்சன் மும்பையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது நிறுவனம் இங்கிலாந்து - மும்பை இடையே விமான போக்குவரத்தை தொடங்க இருக்கிறது.

இது சம்பந்தமாகவும், மற்றும் பல்வேறு தொழில்களை இந்தியாவில் தொடங்குவது சம்பந்தமாகவும் அவர் மும்பை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா மீது எனக்கு எப்போதுமே மிகுந்த பற்றுதல் உண்டு. ஏனென்றால், எனது மூதாதையர் இந்தியாவை சேர்ந்தவர்.

1793-ம் ஆண்டு வாக்கில் எனது தாத்தாவின் தந்தை இந்தியாவில் வசித்துள்ளார். சென்னையிலும் அவர் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் தமிழகத்தில் கடலூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த வம்சத்தில் பிறந்தவன் தான் நான்.

எனது மரபணு பரிசோதனையை நான் ஆய்வு செய்து இருக்கிறேன். அதில் எனது உடலில் குறிப்பிட்ட பகுதி அளவுக்கு ஆசிய மரபணு கலந்து இருப்பது தெரிய வந்தது.

நான் எப்போது இந்தியர்களை சந்தித்தாலும் எனக்கு இவர் உறவினராக இருப்பாரோ என்று நினைத்து பார்ப்பேன்.

இந்தியர்கள் என்றாலே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். அந்த வகையில் இந்தியாவோடு தொழில் தொடர்புகள் ஏற்படுத்துவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News