செய்திகள்
மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு - மசோதா நிறைவேறியது

Published On 2019-12-11 00:27 GMT   |   Update On 2019-12-11 00:27 GMT
பாராளுமன்றம், சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:


அரசியல் சட்டத்தின் 334-வது பிரிவின்படி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியன்களுக்கு 70 ஆண்டு காலம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, இந்த இடஒதுக்கீட்டை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு மட்டும் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார்.

அப்போது, ஆங்கிலோ இந்தியன்களுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்காமல் விட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதற்கு பதில் அளித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் கேரளாவில் அதிகமானோர் உள்ளனர். ஆங்கிலோ இந்தியன்களுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான கதவை அரசு மூடிவிடவில்லை.

பாராளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது.

எனவே, அரசியல் சட்டத்தை வகுத்த முன்னோர்களின் கண்ணோட்டத்துக்கு மதிப்பளிக்கும்வகையில், இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ‘டிவி‌‌ஷன்‘ (பகுதிவாரியாக) முறையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனால் மசோதா நிறைவேறியது.

அப்போது, பிரதமர் மோடி சபையில் இருந்தார்.

Tags:    

Similar News