செய்திகள்
நித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா?
உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த நித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் நபர் அவர் என சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்தார். டிரெண்டிங் சாமியாராக மாறியிருக்கும் நித்யானந்தாவின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
வைரல் புகைப்படத்தில் நித்யானந்தா காலில் விழுந்து ஒருவர் ஆசீர்வாதம் வாங்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. புகைப்படத்தில் நித்யானந்தா காலில் விழும் நபர் யார் என சரிவர தெரியவில்லை. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இணையவாசிகள், நித்யானந்தா காலில் விழுபவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா என கூறி வருகின்றனர்.
இதே தகவலுடன் நித்யானந்தாவிடம் ஆசீர்வாதம் வாங்குவது மத்திய மந்திரி அமித் ஷா என கூறும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது நித்யானந்தா காலில் விழும் நபர் மொரிஷியஸ் நாட்டின் இந்தியாவுக்கான தூதர் ஜகதீஷ்வர் காட்பர்டன் என்பது தெரியவந்துள்ளது.
இதே புகைப்படங்களில் நித்யானந்தா நாட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கும் நிலையில், அமித் ஷா தடுத்து நிறுத்துகிறார் என்ற வாக்கில் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் இந்த புகைப்படம் ஜூலை 9, 2017 இல் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம், ஜகதீஷ்வர் காட்பர்டன் நித்யானந்தாவின் பெங்களூரு ஆசீரமத்திற்கு வந்திருந்த போது எடுக்கப்பட்டதாகும். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது மத்திய மந்திரி அமித் ஷா இல்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.