செய்திகள்
மயங்கிய நிலையில் கிடந்த ஒருவரை சுமந்து வந்த ராஜேஷ் சுக்லா

டெல்லி தீ விபத்தில் 11 உயிர்களை காப்பாற்றிய உண்மையான ‘ஹீரோ’

Published On 2019-12-08 12:36 GMT   |   Update On 2019-12-08 12:36 GMT
டெல்லியில் இன்று 43 பேர் கொல்லப்பட்ட பயங்கர தீ விபத்தில் துணிச்சலாக போராடி 11 பேரின் உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டுமழை பொழிந்து வருகிறது.
புதுடெல்லி:

டெல்லியில் அனாஜ் தானிய மண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வாகனங்களில்இருந்து தீக்கொழுந்துகளுடன் எரிந்து கொண்டிருந்த அந்த கட்டிடத்துக்குள் முதல் வீரராக நுழைந்த ராஜேஷ் சுக்லா உள்ளே சிக்கி உயிருக்கு போராடிய 11 பேரை வெளியே தூக்கிவந்து காப்பாற்றியுள்ளார்.



இந்த மீட்பு பணிகளின்போது தனது காலில் ஏற்பட்ட காயத்தைப்பற்றி பொருட்படுத்தாத அந்த உண்மையான ‘ஹீரோ’ மீட்பு பணிகளின் இறுதிக்கட்டம்வரை அங்கேயே இருந்து பலரை வெளியேற்றுவதற்கு உதவி செய்துள்ளார்.

அவரது கடமையுணர்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள டெல்லி எரிசக்தி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த வீரரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைதொடர்ந்து, தீயணைப்பு படை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

Tags:    

Similar News