செய்திகள்
உன்னாவ் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்பப்பட்ட காட்சி

உன்னாவ் இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை - உ.பி.அரசு அறிவிப்பு

Published On 2019-12-07 13:25 GMT   |   Update On 2019-12-07 13:25 GMT
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக உ.பி.அரசு அறிவித்துள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டார்.
 
கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து அப்பெண்ணைதீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், நேற்று இரவு உயிரிழந்தார். அவரை தீ வைத்து எரித்த 5 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஐதராபாத்திலும் நடந்த இதுபோன்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கற்பழித்து எரிக்கப்பட்ட உன்னாவ்  இளம்பெண் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக உ.பி.அரசு இன்று மாலை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News