செய்திகள்
டெல்லி மகளிர் ஆணைய தலைவர்

உன்னாவ் பெண் எரித்துக் கொலை- குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

Published On 2019-12-07 03:56 GMT   |   Update On 2019-12-07 03:56 GMT
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வேண்டும் என மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டார்.
 
கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து, அப்பெண்ணை  தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், நேற்று இரவு உயிரிழந்தார். அவரை தீ வைத்து எரித்த 5 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சப்தர்ஜங் மருத்துவமனைக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா இன்று காலையில் வந்து விசாரித்தார். தீவைத்து எரிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதற்கிடையே, உன்னாவ் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளை ஒரு மாதத்தில் உத்தர பிரதேச அரசு தூக்கில் போட வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News