செய்திகள்
மாசுபாட்டால் மனித ஆயுட்காலம் குறைந்து விடாது - பிரகாஷ் ஜவடேகர்
இயற்கை மாசுபாடுகளினால் மனிதர்களின் ஆயுட்காலம் குறையும் என இந்தியாவில் எந்த ஆய்வறிக்கையும் தெரிவிக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்கள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு போன்ற விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் துறைக்கான மத்திய மந்திரி ஜவடேகர் மாசுபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
‘இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. மக்கள் மத்தியில் மாசுபாடுகள் குறித்த பயத்தை உருவாக்க வேண்டாம். மாசுபாட்டிற்கும் ஆயுட்காலம் குறைவதற்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக எந்த இந்திய ஆய்வறிக்கையும் தெரிவிக்கவில்லை’ என ஜவடேகர் தெரிவித்தார்.
நாடு முழுவதும், காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள தேசிய தூய்மையான காற்று திட்டத்தை (என்சிஏபி) மத்திய அரசு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.