செய்திகள்
வாக்குப்பதிவு முடிந்து சீலிடப்படும் எலக்ட்ரானிக் இயந்திரங்கள்

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2019-12-05 15:14 GMT   |   Update On 2019-12-05 15:14 GMT
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.
 
இந்த இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். இவற்றில் அதிகபட்சமாக சிவாஜி நகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக எல்லாப்பூர் மற்றும் கே.ஆர்.பேட்டையில் தலா 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி 9-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News