செய்திகள்
நிரவ் மோடி

நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி - மும்பை ஐகோர்ட்

Published On 2019-12-05 11:15 GMT   |   Update On 2019-12-05 11:15 GMT
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அம்மாநில நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை:

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான தொகையை பரிமாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர்மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். 

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதற்கிடையே அவர் லண்டனில் கடந்த  மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.  அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, 5-வது முறையாக ஜாமீன்  வேண்டும் எனக்கோரி லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், நிரவ் மோடியின் வங்கி பணமோசடி வழக்கு தொடர்பான  விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடனை செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார  குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜய் மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News