செய்திகள்
பாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சரியான நேரத்திற்குள் செல்வதற்காக மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஓடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மந்திரிகள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது ரெயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்றத்தை அடைவதற்கு சற்று தாமதம் ஆனது.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கும்போது உள்ளே இருக்க வேண்டும் என்பதால், பாராளுமன்றத்திற்குள் அவர் வேகமாக ஓடினார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் வருகை குறைந்தது தொடர்பாக பிரதமர் மோடி அதிருப்தி அடைந்ததாக, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.