செய்திகள்
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2019-12-05 01:47 GMT   |   Update On 2019-12-05 01:47 GMT
கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 6 மணி வரை நடக்கும் இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். தொகுதி வாரியாக பார்த்தால், அதானி தொகுதியில் 8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜயநகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 9 பேர், கே.ஆர்.புரத்தில் 13 பேர், யஷ்வந்தபுரத்தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக எல்லாப்பூர் மற்றும் கே.ஆர்.பேட்டையில் தலா 7 பேரும் போட்டிக்களத்தில் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News