செய்திகள்
சுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்
106 நாள் திகார் சிறைவாசத்துக்கு பின்னர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இருநபர்கள் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றிரவு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார். விடுதலையான ப.சிதம்பரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு காரில் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்திதார்.
சோனியா காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறுகையில், '106 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசுகிறேன்’ என தெரிவித்தார்.