செய்திகள்
மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம்

106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்

Published On 2019-12-04 15:06 GMT   |   Update On 2019-12-04 15:24 GMT
மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் பெற்று இன்றிரவு திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இருநபர்கள் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம்  வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



சிதம்பரம் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியை சென்னை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்நிலையில், இன்றிரவு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார். சிறை வாசலில் காத்திருந்த அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு காரில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News