செய்திகள்
இமயமலையில் நித்யானந்தா பதுங்கியிருப்பதாக தகவல்
தலைமறைவான சாமியார் நித்தியானந்தா இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா, தலைமறைவாகிவிட்டார். அவர் நேபாளம் வழியாக வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், ஈக்வடார் நாட்டில் ஒரு தீவில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, அதனை தனி நாடாக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கைலாசா தீவுக்கு தனிக்கொடி, சின்னங்கள், அமைச்சர் இலாகாக்களையும் அறிவித்துள்ள நித்யானந்தா, தனிநாடு இணைய தளத்தில், இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நித்யானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது இமயமலை சாரலில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இமயமலை பகுதியில் பேசிய நித்யானந்தாவின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதால், நித்யானந்தாவை விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.