செய்திகள்
நாட்டின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக உள்ளது - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணக்கெடுப்பு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு கால ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமான படுகுழிக்கு தள்ளிவிட்டது. இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டது என்றும் அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கிறது. பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.