செய்திகள்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-11-28 07:59 GMT   |   Update On 2019-11-28 07:59 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.



இன்று நடந்த இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 16 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சீலிட்ட கவர்களில் தாக்கல் செய்யப்பட்ட 3 செட் அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்கும்படி பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News