செய்திகள்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு

Published On 2019-11-27 10:53 GMT   |   Update On 2019-11-27 10:53 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து பலமுறை நீட்டித்து உத்தரவிட்டது.
 
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு தொடர்ந்து அனுமதி அளித்தது.

மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அமலாக்கத்துறை விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த உள்ளதால் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News