செய்திகள்
ராக்கெட் சீறிப்பாய்ந்த காட்சி

14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்

Published On 2019-11-27 04:04 GMT   |   Update On 2019-11-27 12:15 GMT
இந்தியாவின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 14 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா:

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை நவம்பர் 27-ந்தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. 

அதன்படி பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது. கவுண்டவுன் முடிந்த நிலையில், இன்று காலை சரியாக 9.28 மணிக்கு, செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது. 

509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது.
Tags:    

Similar News