செய்திகள்
திருப்தி தேசாய்

சபரிமலை விவகாரம்: திருப்தி தேசாய் வருகையில் மிகப்பெரிய சதி உள்ளது - கேரள மந்திரி

Published On 2019-11-26 11:56 GMT   |   Update On 2019-11-26 11:56 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய நினைக்கும் பெண் செயல்பாட்டாளர் திருப்தி தேசாயின் முயற்சியில் மிகப்பெரிய சதி உள்ளது என கேரள மந்திரி குற்றச்சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு இளம்பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

 இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் தடுத்து, அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையில், புனேவை சேர்ந்த பெண் உரிமை இயக்கத்தை சேர்ந்த செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் 5 பெண்கள் அடங்கிய குழுவினருடன் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கேரள மாநிலத்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை கடந்த ஆண்டு ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிந்து வரவேற்றார். 



இதையடுத்து, சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தனக்கும் தனது குழுவினருக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருப்தி தேசாய் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

திருப்தி தேசாய், பிந்து உள்பட இளம்பெண்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அங்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் திரண்டனர்.

அப்போது பிந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எடுத்து பிந்துவின் முகத்தில் அடித்தார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. 

இந்நிலையில் கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’திருப்தி தேசாய் இன்று அதிகாலை நெடும்பச்சேரி விமான நிலையம் வந்திறங்கியுள்ளார். அவரது வருகை கேரளாவில் ஒரே ஒரு செய்தி நிறுவனத்திற்கு மட்டுமே தெரிந்துள்ளது. 

திருப்தி தேசாய் புனேவில் இருந்து வந்துள்ளார். புனேவில் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாஜக கட்சி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திவருகிறன. ஆகவே இந்த குழு வருகையில் மிகப்பெரிய சதி இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News