செய்திகள்
சிவசேனா

பாஜக பெரும்பான்மையை நிரூபிப்பது காளைமாட்டில் பால் கறப்பதை போன்றது: சிவசேனா தாக்கு

Published On 2019-11-26 01:56 GMT   |   Update On 2019-11-26 01:56 GMT
பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிப்பது ‘காளைமாட்டில் பால் கறப்பதை போன்றது’ என சிவசேனா நாளேடு விமர்சித்து உள்ளது.
மும்பை :

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளதை சிவசேனா கடுமையாக விமர்சித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேவேந்திர பட்னாவிஸ் ஒரு திருடனை போல பதவி ஏற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அஜித்பவார் திருடி கொண்டு வந்த ஆதரவு கடிதத்தை ஏற்று கவர்னர் ஆட்சி அமைக்க வைத்தது மோசடியின் உச்சம். இதை வெட்ககேடானது என்று கூறி அவமதிக்க விரும்பவில்லை. ஆனால் அஜித்பவாரின் இந்த கிளர்ச்சி தோல்வி அடைந்து விட்டது.

அடுத்த சில நாட்களில் இது நிரூபிக்கப்படும். பட்னாவிசும், அவரது கட்சி தொண்டர்களும் அஜித்பவாரை ஜெயிலில் அடைக்க விரும்பினார்கள். இப்போது வாழ்த்தி கோஷம் போடுகிறார்கள். 25 ஆண்டுகால சிவசேனாவின் நட்பை மதிக்காதவர்கள் ஒருநாள் அஜித்பவாரையும் தூக்கி வீசுவார்கள். பாரதீய ஜனதா கட்சியும், அஜித்பவாரும் ஒட்டு மொத்த மாநிலத்தையும் ஏமாற்றி விட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலானது அதிகாரம் என நினைப்பவர்கள் தங்களது கடைசி கட்டத்தில் உள்ளனர். அதை பார்க்க மாநில மக்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் சட்டசபையில் பாரதீய ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பது காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News