செய்திகள்
எம்.எல்.ஏ.க்களை கணக்கெடுக்க ஹோட்டலுக்கு வருமாறு கவர்னருக்கு சிவசேனா அழைப்பு
மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை கணக்கெடுக்க ஹோட்டலுக்கு வாருங்கள் என ஆளுநருக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்டாவிஸ் தலைமையிலான பாஜக நேற்று காலை ஆட்சிப்பொறுப்பு ஏற்றது. பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவு அளித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாதபோது மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்து அரசியலமைப்புக்கு எதிரானது. மேலும், பாஜக தங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென இக்கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. இந்த வழக்கு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
இதற்கிடையில், தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் கவர்னர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவேண்டுமென சிவசேனா தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று கவர்னர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளன. இதனால், மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ நாங்கள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதல் முதலாக எங்கள் 162 எம்.ஏல்.ஏ.க்களை காண இன்று மாலை 7 மணிக்கு கிரன் ஹெயட் ஹோட்டலுக்கு வரலாம்’ என தெரிவித்துள்ளார்.
We are all one and together , watch our 162 together for the first time at grand Hyatt at 7 pm , come and watch yourself @maha_governorpic.twitter.com/hUSS4KoS7B
— Sanjay Raut (@rautsanjay61) November 25, 2019
சிவசேனா தலைவரின் இந்த பதிவால் மகாராஷ்டிராவில் யாரிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.