செய்திகள்
மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா வழக்கு - நாளை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கை நாளை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியது. நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வில் விசாரணை தொடங்கியது.
சிவசேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், பதவிப்பிரமாணம் தொடர்பாக எந்த ஆவணமும் பொதுவெளியில் காட்டப்படவில்லை. ஆளுநரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது. பெரும்பான்மை இருந்தால் பாஜக சட்டசபையில் இன்றே நிரூபிக்கட்டும் என தனது வாதத்தை முன்வைத்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முகுல் ரோஹ்த்கி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு கவர்னர் அளித்த கடிதத்தை நாளை காலை 10.30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.