செய்திகள்
மயங்க்பிரதாப் சிங்

ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் சாதனை

Published On 2019-11-22 06:53 GMT   |   Update On 2019-11-22 06:53 GMT
ராஜஸ்தானில் நீதிபதி பதவிக்கு தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே 21 வயது வாலிபர் தேர்வாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுத வயது வரம்பு 23 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு 21 வயது பூர்த்தியானவர்களும் நீதிபதிகளுக்கான நீதித்துறை தேர்வை எழுதலாம் என்று ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டு அறிவித்தது.

இதையடுத்து ராஜஸ்தானில் நிறைய இளைஞர்கள் நீதிபதிகளுக்கான தேர்வை எழுதினார்கள். அவர்களில் மிக இளம் வயதுடையவரான ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க்பிரதாப் சிங் என்பவர் இருந்தார்.

அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் வக்கீலுக்கு படித்த பிரதாப்சிங்கின் படிப்பு இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம்தான் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் பிரதாப் சிங் நீதித்துறையின் தேர்வு எழுதி நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார். நீதிபதி பதவிக்கு தேர்வு எழுதிய முதல் முறையே அவர் தேர்வாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விரைவில் அவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனை பிரதாப்சிங் படைக்க உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நீதித்துறை தேர்வுக்கு வயது குறைக்கப்பட்டதால்தான் என்னால் இந்த தேர்வு எழுத முடிந்தது. நான் தேர்வாகி இருப்பதன் மூலம் அதிக மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றுவேன்” என்றார்.
Tags:    

Similar News